தலைமைச் செயலகம், த/செ/ஊ/அ/02/12
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.
18/05/ 2012.
தமிழர் இனவழிப்பு நினைவுநாள் – 2012
அன்பான தமிழ் மக்களே,
இலங்கைத் தீவிலே தமிழர் தேசத்தின்மீது காலங்காலமாக அன்னியரால் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பு நடவடிக்கைகளின் உச்சம்தான் 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் நாள் முள்ளிவாய்க்காலில் நடந்த பேரவலமாகும். இந்நாளே தமிழர் இனவழிப்பு நினைவுநாள் என எம்மால் நினைவு கொள்ளப்படுகின்றது.
ஈழத்தமிழரின் விடுதலைப் போராட்டத்தைத் தலைமைதாங்கி நடாத்திக்கொண்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்குமிடையில் மேற்கொள்ளப்பட்ட போர்நிறுத்த உடன்படிக்கையை சிறிலங்கா அரசுதரப்பு படிப்படியாக மீறிக்கொண்டிருந்த நிலையிலும், தமிழ்மக்கள் வேண்டிநின்ற அரசியல் தீர்வைப் பெறுவதற்கான எந்தவொரு முயற்சியையும் சிறிலங்கா அரசுதரப்பு செய்யாமல் காலத்தை வீணடித்துக்கொண்டிருந்த நிலையிலும், பன்னாட்டுச் சமூகம் காட்டிய மெளனத்தை சிங்கள ஆட்சியாளர்கள் சாதகமாக்கிக் கொண்டு தமிழ்மக்கள் மேல் கொடிய போரைத் தொடுத்தார்கள்.







