ஈகச்சுடர் தங்கவேல் விஜயராஜ் அவர்களுக்கு எமது அஞ்சலி

E-mail Print PDF

தலைமைச் செயலகம்,                                                                                  த/செ/இ/செ/02/12
தமிழீழ விடுதலைப்  புலிகள்,

தமிழீழம்.

21/09/ 2012.

 

ஈகச்சுடர் தங்கவேல் விஜயராஜ் அவர்களுக்கு எமது அஞ்சலி

 

தமிழ்நாடு சேலம் நெத்திமேட்டைச் சேர்ந்த தமிழீழ ஆதரவாளர் தங்கவேல் விஜயராஜ் அவர்கள் தமிழின விடுதலைக்காகவும் தமிழீழ மக்களுக்கு நியாயம் வேண்டியும் தன்னைத்தானே தீமூட்டி ஈகச்சாவடைந்துள்ளார். தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாற்றுச் சுவட்டில் பல்லாயிரம் வீரர்கள் தம்முயிர்களை ஆகுதியாக்கியுள்ளனர். இவ்வாறு தமிழரின் விடுதலைக்காகப் புறப்பட்ட பல்லாயிரம் வீரர்களின் ஈகத்தின் வரிசையில் செயல் வீரன் தங்கவேல் விஜயராஜ் தன்னையும் இணைத்துக் கொண்டார்.

2009 மே 18 இன் தமிழின அழிப்பின் உச்சத்தில் வெற்றிக்களிப்பில் சிங்களம் இன்னமும் மிதந்து கொண்டிருக்கின்றது. இதேவேளை தமிழர் வரலாற்றில் உயிரும் சதையும் கலந்த மறக்க முடியாத மாபெரும் மானிட அழிவின் எச்சத்தைத் தேடியவண்ணம் மனித உரிமை அமைப்புக்கள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன.

 

தமிழின அழிப்பிற்கு தற்போது தலைமை தாங்கும் போர்க்குற்றவாளி மஹிந்த ராஜபக்ஷவை மனித உரிமை அமைப்புக்களும் உலகத்தமிழர்களும் புறக்கணித்து போராட்டங்களை நடாத்தி வருகின்றார்கள். ஆனால் இந்திய அரசோ போர்க்குற்றவாளிக்குச் செங்கம்பள வரவேற்பை அளித்துவருகின்றது. இதனைக் கண்டித்தே ஈகச்சுடர் தங்கவேல் விஜயராஜ் தனித்துக் களப்போர் செய்து தீயில் ஆகுதியாகிக் கொண்டான்.

ஈழத்தமிழர்களின் தொப்புட்கொடி உறவைப் புறந்தள்ளி அரசியல் செய்பவர்களுக்கெல்லாம் ஈகயாளர்கள் அப்துல் ரவூப், முத்துக்குமார், செங்கொடி தொடக்கம் விஜயகுமார்  வரையானோரின் தீயுடன் கலந்த ஈகமானது  உடலில் இல்லாவிட்டாலும் உணர்வுகளிலாவது எரிகாயங்களை ஏற்படுத்தி இருக்கவேண்டும்.

எமது விடுதலைப்போராட்டம் பல அற்புத மனிதர்களின் தியாகத்தின் உச்சத்தின் வழிகாட்டலிலேயே  வளர்ந்து நிற்கின்றது. இன்றைய சூழலில் எமது போராட்டத்தின் வீச்சை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த வேண்டும். மனித உயிர்களின் மகத்துவத்தையும் அதன் அற்புத சக்தியினையும் ஆளுமைப்படுத்தி விடுதலைக்காக புடம் போட்டு, வீறுகொண்ட மக்கள் புரட்சியாக மாற்றவேண்டிய பொறுப்பு தமிழக உறவுகள் உட்பட உலகத்தமிழர்கள் அனைவரினதும் கடமையாகும். இச்செய்தியைத்தான்  ஈகயாளன் விஜயராஜ் உலகத் தமிழினத்திற்கு விட்டுச் சென்றுள்ளான் .

ஆற்றல் மிக்க தமிழின உணர்வாளர்களின்  கைகளிலேயே எமது விடுதலையினை வென்றெடுக்கும் பொறுப்பு உள்ளது. தம்மைத்தாமே தீமூட்டி அழித்து மேற்கொள்ளப்படும் ஈகப் போராட்டங்களை மாற்றி எல்லோரின் கைகளிலும் புரட்சித் தீப்பந்தத்தைக் கொடுத்து  பகை கொளுத்தும் சக்திகளாக  மாற்றவேண்டும்.

எம் அன்பிற்குரிய உணர்வாளர்களே,

இனிவரும் காலங்களில் உயிர் அர்ப்பணிப்புக்களைத் தவிர்த்து மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கும்படி  அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

ஈகயாளன் விஜயராஜ் தனக்கிட்ட தீ தமிழர்களின் எழுச்சிக்கும் விடுதலைப்புரட்சிக்கும்  ஏற்றிய தீபமாகவே  நாம் பார்க்கின்றோம். அந்த வகையில் இவரது ஈகச்சாவு எமது போராட்ட வரலாற்றில் ஒரு பதிவாக இருக்கும். ஈகயாளன் விஜயகுமாரை ஈன்றெடுத்த பெற்றோரிற்கும் அவரது உறவுகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளாகிய நாம் எமது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

 

“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”

 

இராமு.சுபன்,
இணைப்பாளர்,
தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்.